Sunday, November 8, 2009

அழுத்தமான அடையாளங்கள்























எவரோ இரவலாய் கொடுத்தப் பார்வையில்
உலகைப் பார்த்துப் பழகியவன் நான்...

என் கண்களைச் சற்றே அதிகமாய் கசக்கி
என் புரிதல்களைப் பொருத்திட முயல்கிறேன்...

என் அடையாளம் தொலைவதாய்
உணர்ந்திடும் வேளையில் எல்லாம்,
புதிய புரிதல்களுக்காய் விரிகிறேன் நான்...

என் போராட்டம், சிறகுகளுக்காய் அல்ல!
நிலையான வானத்திற்காய்!!

சட்டென கரைந்து உரு தொலைக்கும் மேகமாய்
என் அடையாளம்
மாறியபடியே இருக்கிறது!

என் இருத்தலை நிலை நிறுத்துவதற்காய்
நொடிதோறும் நான்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்!!

உண்மையில்,
என்னைப் பார்த்து மட்டுமே நான் அஞ்சுகிறேன்!
காரணம்,
என் ஒவ்வொரு நொடி மாற்றத்தின் முடிவில்,
இதுவரை இருந்த நான் இல்லாமலாகிறேன்!!

நினைவுகளின் விசித்திரக் கருணையால்,
எவ்ரேனும் என் நேற்றைய
அடையாளத்தை என்னோடுப் பகிர்ந்திடும் நொடியில்,
எனக்கு நானே அந்நியமாய் தெரிகிறேன்...





















நிலையின்மையின் அபாயம் உணர்ந்தே
எனக்கான கடவுள் ஒன்றினை உருவாக்கி,
என்னோடு நடத்திச் செல்கிறேன்!

என் முயற்சிகளை
முறியடிக்கும் வண்ணமாய்,
என் கடவுளும், என் புரிதல்களுக்கு ஏற்றாற்போல்
மாறியபடியே இருக்கிறான்!!

புதிய அடையாளங்களும்
புதிய கடவுள்களும் சேர்த்தபடி,
காத்துக் கொண்டிருக்கிறேன், இவ்வுலகில்
என் இருத்தலை நிலைநிறுத்த...

முன்னொரு நாளில்,
என்னோடு விளையாடி மகிழ்ந்த
பழைய விளையாட்டுப் பொம்மையொன்று
மீண்டும் ஒரு சிறுவனுக்காய்
ஏங்கியபடியே காத்திருக்கிறது...