அவன்,
கண்களின் நீர் உதடுகளைத் தொடுமுன்
வெள்ளையாய் சிரிக்கத் தெரிந்தவன்...
மனவலி அதிகம் ஆதலால்,
விரல்வலி மறந்து வரைபவன்...
கிறுக்கன் என ஊர் சொன்னாலும்,
விசித்திரங்களைக் கருவில் சுமப்பவன்...
ஓவியனாய் தோற்றதை விட
மனிதனாய் அதிகமாகவே தோற்றவன்...
கிடைக்கும் ஒருவேளை உணவைப் பார்த்து
நேர்மையாய் மகிழ்ந்திடத் தெரிந்தவன்...
கோயில்கள் போவதைத் தவிர்த்து,
தெருவோரக் குப்பைகளை தரிசிப்பவன்...
பரிதாபத்தின் அபாயம் அறிந்தே,
வார்த்தைகளைக் கொஞ்சமாய் தருபவன்...
தெருவில் தான் வரையும் ஓவியங்களை,
ரசிகனாய் வியக்கத் தெரிந்தவன்...
பிழைப்பின் அவசியம் மறந்து,தன் ஒவியம்
கரைக்கும் மழையை வரவேற்பவன்...
யதார்த்தங்களைச் சட்டை செய்யாமல்,
சற்று அதிகமாய் புன்னகைப்பவன்...
என் அன்பான கிறுக்கன்,
கற்றவன் இல்லை,
ஆயினும் எனைக் கவர்ந்தவன்...
காரணம்,
அவன் நிறைவாய் வாழத் தெரிந்தவன்!
குழந்தைகளை மகிழச் செய்தவன்!
சுயநலத்தின் சுவடுகள் இல்லாதவன்!
தெளிவாய் சொன்னால்,
என்னால் விளக்க முடியாதவன்!!

தினம் செல்கிறேன் அவனைப் பார்க்க...
பலபேர் அவனைச் சுற்றி!
அவர் எறியும் ஓர் சில
சில்லறைகள் ஆங்காங்கே...
சலனமில்லாமல் தன் ஓவியத்தோடு,
என் கிறுக்கன்...
பலமுறை அவனோடு பேசத் தோன்றி,
தடுமாறி தோற்றுவிட்டேன்...
பசியை மட்டும் ஓவியத்திடம் ஒப்படைத்து,
மற்றபடி,
சுதந்திரமாய் இருப்பவன்...
கூண்டுக்கிளியாய் நான் அந்நியமாய் உணர்ந்தேன்...
உண்மையில்,
அவன் வாழ்க்கையில் நானும் வாழ்ந்தேன்...
அவன் சிறகுகளில் நானும் பறந்தேன்...
அவன் நினைவில் என்னை மறந்தேன்...
அவன் சுதந்திரத்தில் நானும் மகிழ்ந்தேன்...
அவனை நன்றியோடு
பார்த்துவிட்டுத் திரும்புகிறேன்!!
அவனோடு,
இன்றும் ஒரு வார்த்தைக் கூட
பேசாமல் திரும்புகிறேன்...
இருப்பினும் வருத்தமில்லை
காரணம்,
"கடவுள்களிடம் நான் பேசியதேயில்லை..."





