Sunday, October 14, 2007

மகிழ்ச்சி
















மாறிக் கொண்டிருக்கும்
உலகத்தின் ஒவ்வோர் அசைவும்
ஆச்சரியத்தின் ஆணிவேர்கள்...
இந்த
மாற்றங்களின் வேகத்தில்
பழகிய காரணத்தால்,
மாறாதிருப்பதை மனிதன்
அதிகம் ரசிப்பதில்லை தான்!!

நகராத ஜன்னல் கம்பிகளைக் கூட
ரசிக்கும் பக்குவம்,
குழந்தைகள் தவிர யாருக்கும் இருப்பதில்லை!!
பொம்மைகளுக்கு சோறூட்டும்
அசட்டுதனங்களை,
அது அறிவதும் அங்ஙனம் தான்...
வளர்ந்த பிறகும்,
குழந்தையாய் மாற முனையும் மனிதரை
மூடரென கண்டெடுக்க
என் கண்களும் பழகித் தான் விட்டன...

அப்படி ஒரு மூடனைத்தான்
நானும் சந்தித்தேன்!!
நான் பழகிய தெருவில்,
பழகாத மனிதன் அவன்!!
நிழலுக்காய் என்
இல்லத்தின் பக்கமாய் நின்றான்...
சிரித்தேன் சிக்கனமாய்,
அசைவற்று நின்றான்...

ஏனோ எனக்கு,
ஆச்சரியமாய் தெரிந்தான்...
மெதுவாய் அவனருகில் சென்று
அழைத்தேன் - பதிலில்லை!!
என்னை உற்று நோக்கிவிட்டு
முகம் திருப்பினான்...

சற்று பொறுமையிழந்தேன்,
"புன்னகையில் கூட உனக்கு ஏன் சிக்கனம்?"
- உரக்கக் கேட்டேன்...

சிறிதாய் உதடுகள் நகர்த்தினான்,
"நீ மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரியவில்லை,
உன்னைப் பார்த்து எப்படி சிரிப்பது?"
-தெளிவாய் பேசினான்...

புரியாமல் நான் விழிக்க, அவன் தொடர்ந்தான்,
"உலகில் உனை அதிகம்
மகிழவைப்பது எது?"


















அக்கறையில்லாமல் நானும் சொன்னேன்,
"என் குடும்பம்...நண்பர்கள்...
நல்ல உணவு...அழகான கோயில்...

எனை நிறுத்தி அவன் கேட்டான்,
"இவையேதும் இல்லையெனில் யாது செய்வாய்?"
விழித்தேன்!!

கிழிந்த பந்தொன்றை எடுத்து,
என் கைகளில் அழுத்தி சிரித்தான்...
"இதை வைத்து என்ன செய்வது?'
- திருப்பிக் கொடுத்தேன்...

அழுத்தமாய் தொடர்ந்தான்,
"குழந்தையிடம் இதைக் கொடுத்துப்பார்...
அது கற்றுக் கொடுக்கும்,
இதை வைத்து எப்படி மகிழ்வதென்று!!
அர்த்தம் பார்த்து அது மகிழ்வதில்லை...
சுற்றி நடக்கும்,
ஒவ்வோர் அசைவையும் ரசிக்கும்
பக்குவம் அல்லவா கொண்டுள்ளது...

அதனால் தான் குழந்தைக்கு,
இறப்பின் பயம் இல்லை...
எதிர்பார்ப்பின் சுமை இல்லை...
வெறுப்பின் பொருள் புரிவதில்லை...

வாழ்க்கையை முழுமையாய் வாழ்பவனுக்கு மட்டுமே,
இறப்பை அலட்சியம் செய்யும்
அதிகாரம் கிடைக்கிறது...

ஆதலால், காரணம் தேடாமல்
குழந்தையாய் வாழப் பழகு!
மகிழ்ச்சியின் இலக்கணம்,
உனக்கு நினைவு வரும்...

செருப்பு தைப்பவனின் ஊசியை
நீ ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில்
தங்க மகுடம் உனைக்
கடந்துப் போகலாம்!
இருப்பினும், மகிழ்ந்திடு நேர்மையாய்"
- நிறுத்திவிட்டு
அழகாய் சிரித்தான்...

இம்முறை அவன் புன்னகையின்
பொருள் எனக்குப் புரிந்தது...

No comments: