
என் தேடல்களைத் தொகுத்தேன்,
அது வானமாய் விரிந்தது..
சிறகுகளுக்காய் தவமிருந்தேன்,
எனக்கு அனுபவம் பிறந்தது..
பறப்பதற்காய் எத்தனித்தேன்,
முகவரிகள் அறிமுகமாயின..
பயணங்கள் தொடங்கினேன்,
புன்னகைகள் அர்த்தம் பெற்றன..
காற்றோடு போராடினேன்,
வெற்றி குரல் கொடுத்தது..
கூடுகள் பல சேர்த்தேன்,
கடமைகள் எனைச் சுவைத்தன..
சிறகுகள் தளர்ந்தேன்,
யதார்த்தங்கள் தடைகளாயின..
முதுமையில் களைத்தேன்,
கனவுகள் கதைகளாயின..
மீண்டும் நிலம் திரும்பினேன்,
உண்மையைக் கருவுற்றேன்..
குழந்தையாய் மாறிச் சிரித்தேன்,
தத்துவங்கள் எனை வணங்கின..
பறவைகள் வாழும் கூடாரமானேன்,
கோபுரங்கள் பொறாமைப்பட்டன..
தாயாய் மாறிப் போனேன்,
கடவுள்கள் காணாமல் போயின..
எனை உரசிய ஒவ்வொரு கல்லும்
வைரமாய் மாறத் தொடங்கின,
நான் இறந்து போனேன்!!
இனி,
நான் மட்டும்
மீண்டும் மீண்டும் பிறப்பேன்,
பறக்கத் தொடங்கும் ஒவ்வொரு பறவையோடும்...
1 comment:
majaa vandhudutthu.. anaa english translationum irundhurukkalaam sila yedatthula..
Post a Comment