
பலமாய் வீழ்ந்திடும் இடியின் சத்தம்
என் காதுகளில்
துல்லியமாய் கேட்கிறது !
உற்று கவனித்ததில்,
அது என் இதயத்தின் துடிப்பென
மெல்ல உணர்கிறேன் !!
கடல் விரட்டியடிக்கும் காற்று போல,
என் நிலை மறந்து
ஓடிக் கொண்டிருக்கிறேன்...
களைப்பு கண் திரையினைப்
படர விடத் தொடங்குகிறது...
நான் விழுங்கும் ஒரு துளி எச்சில்கூட
உலோகம் போல்
கனமாய் இறங்குகிறது...
என் உலர்ந்த நாக்கு
முள் படுக்கையாய் மாறி
என் உதடுகளை கிழித்து
செங்குருதியில் நனைகிறது...
இருப்பினும்,
நான் அறியாத தூரத்தின்
எல்லைகள் காணும் உவப்பு மட்டுமே
என் உயிர் துடிப்பாய் மிஞ்சுகிறது...
எதற்காக ஓடுகிறேன் நான்?
நான் அறிந்த முகங்களையெல்லாம்
மறந்திட வேண்டும் எனக்கு!
எனக்குப் பழகிய குரல்களையெல்லாம்
என் காதுகளிலிருந்து
அகற்றிட வேண்டும்!!
முகமறியாத ஒரு தேசத்தில்
புதியவனாய் வாழ்ந்திட வேண்டும்!!
அதற்காய் தான் நான் ஓடுகிறேன்...
என்னைக் கடப்பதற்காய் மட்டுமே
விரைந்துக் கொண்டிருக்கிறேன்...

என்னைச் சுற்றி ஏதுமேயில்லாத சமவெளி!
நட்சத்திரம் தொலைத்த வானம் போல்
வெறுமையான வெளி!!
துடிதுடித்து துவண்ட என் இதயம்
என் இறுதி வாக்குமூலத்தைப்
பேசிப் பழகிக் கொண்டிருக்கிறது...
இருப்பினும்,
வழி எதுவும் கண்படவில்லை...
மங்கிய என் கண்ணோரத்தில்
சட்டென ஒரு ஒளி!
வறண்ட முலைகளில்
தேன் சுரந்ததுபோல் ஓர் உணர்வு!!
நீள் வானத்தின்
கரைத்தொட்ட மிதப்பு!!
ஆம்,
புது நிலம் தொட்டு விட்டேன்...
நான் கற்பனையில் கூட
தொட்டுப் பார்க்காத தேசம்...
வெளிர் நீல நிற இலைகள்
நிரம்பிய மரங்கள்...
இசையாய் வழிந்து கொண்டிருக்கும் காற்று...
நின்றபடியே தூங்கும் மனிதர்கள்...
அத்தனையும் புதிது எனக்கு...
நான் அறவே அறிந்திராத முகங்கள்!
எதனோடும் ஒப்பிட இயலாத முகங்கள்!!
நான் கேட்ட எதனோடும்
பொருத்த முடியாத குரல்கள்!!
ஓடிய வலி மறந்து
உரக்கச் சிரிக்கிறேன்!!
நான் அறிந்திடாத முகங்களையெல்லாம்
பார்த்துச் சிரிக்கிறேன்...
நான் கண்ட தேசமெங்கிலும்
புன்னகைக்கு ஒரே அர்த்தம் மட்டுமே
இருப்பதை எண்ணி வியக்கிறேன்...
அங்கு குடிக்கும் நீர் கூட
புளிப்பாய் வேறு மாதிரி இருக்கிறது...
இருப்பினும்,
ரசிக்கிறேன் என் புதிய தேசத்தை!
அவர்களோடு குதூகலிக்கிறேன்!
நகரமெங்கும் சுற்றிக் கொண்டாடுகிறேன்!!
கண் படும் முகமறியாத
ஓர் பெண்ணோடு புணர்கிறேன்!
தேசமாளும் அரசனின்
தரிசணம் கண்டு சிலிர்க்கிறேன்!!

ஏதென்று புரிவதற்குள்
அந்த முகங்கள் எனக்குப்
பழகத் தொடங்கி விட்டன...
அவர் குரல்களின் விசித்திரம்
சட்டென புரியத் தொடங்கி விட்டது...
வெகு காலம் நான் அறிந்த
தேசமாய் எனக்குப் படுகிறது!!
குழப்பத்தில் மயங்கி விழுகிறேன்!
கண் விழிக்கையில்
ஓர் யுகம் கடந்தது போல் இருக்கிறது!!
தெருவில் இறங்கி நடக்கையில்
திடீரென, என் பழைய இல்லம்
கண்ணில் பட திடுக்கிடுகிறேன்...
திரும்பிப் பார்க்கையில்,
மிகவும் பழகிய முகம் ஒன்று தெரிகிறது!
சிலையாய் நின்று விட்டேன்!!
காரணம்,
அது என் முகம் தான்...
என் தலை சுற்றுகிறது!
எனைச் சுற்றி அனைவரும்
என் முகத்தோடே இருக்கிறார்கள்...
கறுப்பாய், சிவப்பாய்,
பருமனாய், குள்ளனாய்,
ஆணாய், பெண்ணாய்,
குழந்தையாய், அரசனாய் என
எங்கும் என் முகம் தான்!!
ஏதென்று உணர்வதற்குள்
இடி முழக்கத்துடன் என்
இதயம் கதறுகிறது...
கடல் விரட்டியடிக்கும் காற்று போல,
மீண்டும் ஓடத் தொடங்குகிறேன்
முகமறியாத ஒரு தேசம் தேடி...

