Sunday, January 24, 2010

எனைத் தொடரும் குரல்


















அறியப்பட்ட என் இறந்தகாலம்
சரித்திரம் ஆகிறது...
அறியப்படாத என் இறந்தகாலத்தின் உண்மை
எவர் கைகளுக்கும் சிக்காமல்
அமைதியின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது...

அக்கறையாய் நான் பதிவுசெய்த
என் இறந்தகாலம்,
நான் கடந்து வந்த
வாழ்க்கையின் மையமாய் இருக்கிறது...

என் ஆழ் உறக்கத்தின்
அடி வயிற்றில்,
நெறிப்படுத்தாத என் நினைவுகள்
தலைவிரித்து சுழன்றாடுகிறது...

நான் மிருகமாய்
வாழ்ந்ததின் அடையாளமாய்
என் நாவின் ஓரத்தில்
நான் அறிந்த உதிரத்தின் ருசி
மிச்சம் நிற்கிறது...

கொடியறுத்த நொடிதனில்
தரைத்தொட்ட என் சிவந்த பாதங்கள்
இந்த நொடி வரை அளந்து வந்த நிலமனைத்தையும்
எனை அறியாமல் நினைவு கொண்டு,
என் உலக வரைபடத்தை நானே உருவாக்குகிறேன்...

சிறிது சிறிதாய்
நொடி நொடியாய் நான்
சேர்த்து வந்த என் இறந்தகாலம்
எவர் கண்களின் பார்வையாலும்
பொருள் ஏதும் பெறாமல்
என் உயிராழத்தின் துடிப்பாய் நிலைக்கிறது...
















முனைப்புடன்
நான் தடுக்க முயன்றும்,
நான் வடிக்கும் ஒவ்வோர் எழுத்தின் இடையிலும்
செருகியபடி வழிந்து விடுகிறது...

ஆற்றோரமாய் நின்றபடி
ஒய்யாரமாய் நான் வீச,
அழகாய் தாவி குதித்தெழுந்து
ஆற்றுநீரின் அறியாத ஆழத்தில்
சென்றமர்ந்த அந்த
சிறிய கல்லின் அடையாளத்தை
நான் மட்டுமே அறிவேன்...

நானே மீண்டும் கண்டுணர இயலாத
அந்த இறந்தகாலம்,
என் உணர்வுகளின் உண்மைகளோடு
புதைந்து விடுகிறது...

என்னோடு நடந்து வருபவனிடம்
பகிர்ந்திட வழி தெரியாமல்
எனக்கு மட்டுமே புரிந்த மொழியில்
நான் மட்டுமே வடித்து வைத்த என் நெறியில்
உறவாடிக் கொன்டிருக்கிறது...

தஞ்சைக் கோபுரத்தின் முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்கையில்
என்னுள் இமயமாய்
வளர்ந்து நிற்கும் அந்த
ஆற்றங்கரை கல்
எவர் கண்களுக்கேனும் தெரிகிறதா??

2 comments:

Anonymous said...

Impressive as always :) U should also try to fit in some background about how u write stuff like this.. In awe :)

Anonymous said...

good one.. ella molla maari thanamum pannittu kallu kolam nu kadha uda vendidhu..

"sivandha kaalgal" laan romba too much.. kari satti maari irundhundu .. totally unwanted.. ;)