Wednesday, September 16, 2009

நிழல் கூத்து


















விரல் நுனி நட்சத்திரங்களை
எண் திசை எங்கிலும்
மகரந்தம் சுமக்கும் காற்றென
சிதறியபடி நகர்ந்து கொண்டிருக்கிறது
நாட்டியக்காரியின் நிழல்...

தலைவனென, தலைவியென
மரக்கிளையென, புள்ளிமானென
மாறியபடி அவள்
பதிக்கும் முத்திரையாய்
உருவகித்து அசைந்து கொண்டிருக்கிறது...

முகமறியா இருள் ஓவியமது
இரவலாய் உயிர் கொண்டு
பிரபஞ்ச பெருவளி நடனத்தின்
சிறுதுளியாய் மாறுகிறது...

கூரிய அம்பில் சிக்கிய சிறு பறவையாய்
நாட்டியக்காரி விழும் நொடியில் எல்லாம்,
வலியின் சுவடறியாத போதும்
தரையில் வீழ்ந்து அசைவற்று நிற்கிறது...

எழுவதற்காய் உத்தரவு வேண்டி,
உயிர் கொடுத்து இணைத்தவளை
ஏக்கமாய் பார்த்திடும் அதன் பாங்கு தான்,
என்னுள் எத்தனை உணர்வுகளை விளைக்கிறது!!!

நான் எழுவதை முதலாய்
உணர்ந்திடும் என் நிழல்,
ஏனோ நான் வீழ்ந்தேன் என
இறுதிவரை நம்ப மறுத்தபடியே இருக்கிறது!!!

மெழுகுவர்த்தியின் மங்கிய வெளிச்சத்தில்,
என் முன் சுவற்றில்
என்னை விட பெரிதாய் வளர்ந்து
நான் அறியாத சாகசங்களை
செய்து காட்டிய என் நிழல்,
செயவதறியாது தவிக்கையில்
உள்ளூர நான் சிரிக்கிறேன்...

நாட்டியக்காரியின் ஒப்பற்ற நடனத்தினூடே,
பறந்திட வானத்திற்காய் ஆசைப்பட்டு,
அரசனாய் அரியணைக் கனவு கண்டு,
கடவுளாய் பத்தினியின் புகழ் காத்து,
கள்வனாய் வாள் நுனியில் மடிந்து,
முடிவில்
சலனமில்லாமல் அவளோடு
தேநீர் கடை வரை
மெல்ல நகர்ந்த்து கொண்டிருக்கிறது
அவளது அழகிய நிழல்...