Thursday, November 8, 2007

எண்ணம்


















அழகான மாலை நேரம்...
நான் எட்டிப் பார்க்கும் தூரம் வரை
கடல் மட்டுமே தெரிகிறது...

திட்டுதிட்டாய் மேகக்குவியல்கள்,
வெறுமையான வானத்தில்!!
சுற்றி அத்தனை மனிதர்களும் இல்லை...
அதனால்,
கடல் நோக்கி உரக்கக் கூவுகிறேன்...

அர்த்தமில்லாத இந்த காரியத்தில்,
எனக்கு அத்த்னை மகிழ்ச்சி!!

ஆச்சரியம்,
எனைச் சுற்றி மனிதரில்லை...
எனை உயர்த்தி பேசும் புகழ்ச்சி இல்லை...
எனக்காய் நான் உருவாக்கும் உலகம் இல்லை...
எதுவுமே இல்லை...
இருப்பினும், மகிழ்கிறேன்!!

கடலின் ஓயாத இரைச்சல்,
என் காதுகள் ரசிக்கும்
இசையாய் மாறியிருந்தது...

நிரம்பிய வயிறும், நிறைந்த மனதும்
தேடிப் போராடும்,
என் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும்
காரணமில்லாமல், இன்று
அசைவற்று நிற்கிறது...

நான் நினைத்தால்,
அலைகளின் வேகத்தைக் குறைக்க முடியாது!
நட்சத்திரங்களை இரவலாய் கொடுக்க முடியாது!
காற்றை இழுத்து என்னருகில் அமர்த்த முடியாது!

என் ஆற்றல்கள் தோற்றுப்போய்
கைகள் கட்டி அமர்ந்திருக்கிறேன்...
இருப்பினும்,
மனம் நிறைய மகிழ்ச்சி!!

வேகமாய் நகரும் என்
கடிகார முட்களைச் சட்டை செய்யாமல்,
எங்கோ தெரியும் கப்பலைப் பார்த்து,
கைகள் ஆட்டிக் கொண்டிருக்கிறேன்...

என்னை அறியாமல்,
உலகோடு ஒன்றியது போல்
ஓர் பிரமை...

தூரமாய் விரியும் கடலின்,
மறுகரையில் அமர்ந்திருக்கும்,
இன்னோர் மனிதனும் எனைப் போல்
தான் மகிழ்ந்திருப்பான்...

கிழிந்து போன மேகங்களுக்கு
இடையில் ஓளிந்துபடி,
எனைப் பார்த்து, புன்னகைக்கிறது
அந்த நட்சத்திரம்!

சலனமில்லாத வானம்,
நான் அறியாத மெளனத்தை,
என் உதடுகளில் பொருத்துகிறது!

ஆச்சரியத்தில் விரியும் கண் இமைகளைக் கூட,
மெல்லிய காற்று,
மெய்மறக்கச் செய்கிறது!

என் மனம் மட்டும், ஏனோ
எவர் கைகளுக்கும் சிக்காமல்,
வேகமாய் நகர்ந்தபடி...


















என்றோ பள்ளிக்கூடத்து வகுப்பில்,
என் தோழர்களோடு பேசிய ரகசியங்கள்
காரணமே இல்லாமல்,
இப்போது என் காதுகளில் கூசுகிறது...

என்றோ நிகழ்ந்த நிகழ்ச்சிகள்
நினைத்து,
இப்போது என் கண்கள் பனிக்கிறது...

மீண்டும் நினைக்கக் கூடாதென
வலுக்கட்டாயமாய் மறந்த முகங்கள்,
கண்முன் வந்து சிரித்துப் போகிறது...
நானும் சற்று சத்தமாய் சிரிக்கிறேன்!!

எண்ணங்கள் - ஓர்
விசித்திரக் கலவை!

ஒரு கணம்,
வரையறுக்க முடியாத திசைகளில்
பாயும் காட்டாறு!
மறுகணம்,
குழந்தையென என் கைப்பிடித்து,
நடக்கும் குளிர் ஓடை!!

கண்டு, கேட்டு, உணராத இனிமைகளையும்
வலிகளையும் கூட,
எடுத்துக்காட்டிய அதிசயத் தோழன்...

இலை நிறைய உணவு இருக்கையில்,
நான் அறியாத தேசத்து பட்டினி,
எனக்குப் புரிந்ததுண்டு...

கையினில் சிறிதாய் பட்டக் காயம்,
நேற்று நான் பறித்து எறிந்த
பூக்களின் அழுகுரலைக் கேட்கச் செய்ததுண்டு...

என் துன்பத்தில் கூட,
புரியாத இன்பத்தைத் திணித்ததுண்டு...
என் இன்பத்தில் கூட,
அறியாத துன்பத்தைக் காட்டியதுண்டு...

எவர் மீதும் சிறியதோர்
கல் எறிய முற்படுகையில்,
என் மேல் உலகம் பொழிந்த
பூக்களின் எண்ணிக்கை நினைவு வருகிறது...

உணர்வுகள் மீறிய எண்ணங்கள் -
அவற்றை வணங்குகிறேன்!!

கரையோரம் நடந்து போகிறேன்,
கற்றுத் தேர்ந்த பாடகர்
அமுத்மென இசைப் படித்துக் கொண்டிருக்க,
காது கேளாத சிறுமி, அதனை
அழகாய் ரசித்துக் கொண்டிருக்கிறாள்...

உணர்வுகள் மீறிய எண்ணங்கள் -
அவற்றை வணங்குகிறேன்!!

No comments: