Tuesday, October 16, 2007

ஒரு குழந்தையின் விசும்பல்
















மெதுவாய் நகரும் நாட்களை
எல்லாம்,
கனவுகளின் நீளத்தில்
கரைத்து விடுபவன் நான்...

பத்திரப்படுத்தும் கோபங்களை
எல்லாம்,
தாயாய் கருவுற்று
வெறுப்பாய் பெற்றெடுக்கிறாய் நீ...

சத்தமாய் குரைக்கும்
நாய் கூட,
தூங்கும் குழந்தையை
எழுப்பும் எண்ணம் கொள்வதில்லை!!!
நீ மட்டும் ஏன்??

அழுத்தமாய் எனை
அணைத்த தாயின் கதகதப்பு...
அன்பாய் எனைப்
பிடித்த தந்தையின் நெகிழ்வு...
பெயரிடும் முன்னமே, எனை
அழகாய் கிசுகிசுத்து
அழைத்த காற்றின் குரல், என
ஈர உணர்வுகளுக்காய்
எதிர்பார்த்து வாழ்பவன் நான்...

கருவறையின் ஈரப்பிடியிலேயே
கிடந்த போதும்,
என் மேல் விழுந்த
அந்த முதல் நீர்துளி,
இன்றளவும்
புதுமையாகத்தான் இருக்கிறது...

எதுவுமே அறியாத வயதில் கூட
என் தாயின் சேலையின்
ஈரவாசத்தில்
திளைத்தவன் நான்...

உணவு உண்பதற்கு முன்னமே
உணர்வுகளை உண்டவன் நான்...

ஏன் நீ ஈர அன்பினைக்
கண்டதேயில்லையா??

உன் தாய் ஊட்டிய சோற்றில்...
உன் கால்கள்
முதன்முதலாய் தரைத்தொட்ட
ஸ்பரிசத்தில்...

வெப்பத்தில் உனைக் காக்க
வெளியேறிய வியர்வையில்...


உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்த்த
அந்த நொடியில்...

முதலாய் பார்த்த அந்த வானத்தில்...
கிணற்று நீரில்...
ரோஜாபூவில்...
கோயில் புறாக்களில்...

நடக்கப் பயில்வதாய்
விழுந்து அழுத அந்த நிமிடத்தில்...
அதிசயமாய் வியந்த
ஜன்னல் கம்பிகளில்...

சுவற்றில் பதித்த
அழகு கிறுக்கல்களில்
மகிழ்ச்சியை எடுத்துக்காட்டிய
பட்டாம்பூச்சி சிறகுகளில்...

தந்தையின் முகத்தில் பார்த்த
அந்த பெரிய மீசையில்,
ஓரமாய் சாய்ந்திருக்கும்
கருப்புக் குடையில்... என

எதிலுமே ஈரம்
கண்டதில்லையா நீ??

ஏன் என் மேல் இத்தனை
வெறுப்பு கொள்கிறாய்?
மனத்தில்
ஈரம் நிரப்பு...

அன்பான கொசுவே,
எனைக் கடித்து, காயப்படுத்தி
என் தாயை
வருத்தப்பட வைக்காதே...
நானும்
உன்னைத் தாக்க மாட்டேன்...
உனக்கு வலி தர மாட்டேன்...
காரணம்,
உன் தாயும் வருத்தப்படுவாளே...

"தன்னைக் கடிக்கும் கொசுவை
விரட்டத்
தெரியாமல் அழும்
இந்த குழந்தையின் விசும்பல்,
அந்த கொசுவுக்குக்
கேட்டதோ இல்லையோ,
என் காதுகளில் தெளிவாய்
கேட்கிறது..."

2 comments:

Anonymous said...

Maranam

Unknown said...

hey u will write poems in tamil lam ...? nice ......